யார் யாரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில் தேர்ச்சி இல்லாத காலகட்டத்தில் இருந்த போது (92ம் வருடம் )நிகழ்ந்தவை.
எனது தந்தையின் அலுவலகத்தில் வைத்து அந்த நபரைப் பாரத்தேன்.
வாட்ட சாட்டமாய்,வண்டி மைக் கருப்பில்,வெள்ளையும் சள்ளையுமாய் கை,கழுத்தில் கனமாக ஆனால் உறுத்தாத செயின்களுடன் அபார உயரத்தில் இருந்தான்.
தான் (கோவைக்கு அருகே அப்போது பிரபலமாய் இயங்கிக் கொண்டிருந்த ஒரு கம்பெனி) எம்.டி-க்கு சொந்தக்காரன் என்று சொல்லிக் கொண்டான். பையன் இப்படியே இருந்தால் என்னங்க ஆவது என்று கேட்டு விட்டு, நான் வேண்டுமானால் செக்ரெட்டரியிடம் கேட்டு மடத்துக்குளம் அருகே உள்ள ஆலையின் சிவில் இன்ஜினியராய்(civil engineer) சேர்த்து விடவா? என்று கேட்டான். எனது தந்தை மதியம் என்னிடம் கேட்டார், வேலை வாய்ப்பு அலுவலகத்தையே நான் நம்பாமலிருந்த காலம், தனியார் கம்பெனி வேலைக்கு 10000 செலவு பண்ணவா? என்று மறுத்து விட,
அடுத்த நாள் கூப்பிட்டார்,அவரோடு போய் வருமாறு சொல்ல, சரி போவது தானே என்று கிளம்பினேன்.(வாடகைக் கார் உபயம் எனது தந்தை என்று பின்பு அறிந்து கொண்டேன்)
அந்தக் கம்பெனி அப்போது தாற்காலிகமாய் ஒரு திருமண மண்டபத்தில் இயங்கி வந்தது.அலுவலக கட்டுமானத்திற்க்கு ஒரு இன்ஜினியர் இருந்தார்.
(இதை முதலிலேயே சொல்லிட்டான்)
இது இன்னுமோர் ஆலை கட்டுமானத்திற்க்கு எனச் சொன்னான்.
போய் ரிஷப்ஷனில் கேட்டு,என்னை உட்காரச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டு வந்தான்.
வந்து, ‘’தம்பி M.D பிஸி, செக்ரெட்டரியிடம் சொல்லி விட்டு வந்திருக்கின்றேன். அநேகமாய் நாளை நீ வர வேண்டி இருக்கும்’’
வரும் வழியில், அன்னபூர்ணாவில்(AnnaPorna) அட்டகாசமான ஒரு காபி சாப்பிட்டு விட்டு திரும்பினோம்.
அடுத்த நாள் காலை எனது தந்தையிடம்
‘’இன்று மாலை 4 மணிக்கு கோவைக்கு போன் பண்ண வேண்டும்,பையனும் இருந்தால் நல்லது,அதனால் 3.30க்கு என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க’’
சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போய்விட்டேன். 3.40க்கு ஆட்டோ(அன்றெல்லாம் S.T.D booth மூலைமூலைக்கெல்லாம் கிடையாது,இன்றோ அதுவும் கிடையாது)3.50க்கு போன் பண்ணிட்டான். நானும் ஆட்டோக்காரரும் அவனைக்குறித்ததான சம்பாதனையில் இருந்தோம்.
அவன் ஆட்டோவிலேயே தான் போவானாம், இந்த பூத்துக்குத் தான் ரெகுலராக வருவானாம். இவனைத் தேடி தனியார் கேஸ் ஏஜென்ஸி ஆள் ஒருத்தரும், கவர்ன்மென்ட் கேஸ் ஏஜென்ஸி ஆளும் வந்து கொண்டிருக்கின்றனர். செல்வாக்கு இருக்கும் போல என்றார்.
போன் பண்ணிட்டு வந்து ‘’தம்பி நாளைக்கு உனக்கு அப்பாயின்மென்ட் தயாராகி விடும், இண்டர்வியூ எதுவும் வேண்டாம் என்று எம்.டி சொல்லிட்டாராம் அப்பாவிடம் சொல்லிடு’’என்றான்.
நான் கிளம்பினேன், ‘’தம்பி எதுக்கும் நீ காலையில் வீட்டுக்கு வாயேன் வந்து செக்ரெட்டரிக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்திடலாம்’’என்றான்.
காலை,மாலை இரண்டு நேரமும் ஆஜரானேன். தினமும் பொய்கள் புதுப்புது அவதாரமானது.
காலையில் சில சமயம் இரண்டொரு உள்ளூர் ஆட்களைப் பார்த்திருந்தேன். யாரும் யாரோடும் பேசவே மாட்டோம், எதோ பிட்டு படத்து தியேட்டரில் ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொள்வோம்.(இப்படித் தான் பொதுவாக எல்லோரும் ஏமாறுவது)
நண்பர்கள் வட்டாரத்தில் இவன் எதோ பிகரை கரெக்ட் பண்ணிக் கொண்டிருப்பதாக பேச்சு வளர்ந்தது.
ஆட்டோக்காரருக்கு ‘’என்ன தம்பி இது இப்படியே எத்தனை நாளுதான் வருவாய்?’’ என்று கேட்குமளவுக்கு நமது பொறுமையைச் சோதித்தான்.
அன்று திங்கட்கிழமை காலை வழக்கம் போலவே அவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் போது, ஆட்டோக்காரன்,
‘’தம்பி அந்த ஆள் வீடு பூட்டிக்கிடக்கிறது, முன்னாடிப் போட்டிருந்த பிரம்பு சேர்களைக் கூட காணவில்லை வீட்டை மாத்திட்டனோ என்னவோ’’ என்றான்..
அப்பாடி ஒரு தொல்லை விட்டது என்ற மனநிலையில் இருந்ததேன்.
அப்பாவின் அலுவலகத்துக்கு வந்தேன், ‘’எங்கேடா ஜெயக்குமார் சாரை’’
‘’அப்பா, அந்தாளு வேறேங்கேயோ வீட்டை மாற்றி விட்டான் போல,அதனால் அந்த ஆளு வந்தா வீடு எங்கேன்னு கேட்டுக்கோங்க’’
‘’அடப்பாவி நல்லாப் பார்த்தாயா? உன் வேலைக்கு பணம் கொடுத்திருக்கிறேனே’’
அப்போது தான் நான் வளைத்து வளைத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்
‘’இதனை முன்னமே சொல்லியிருந்தால் அவனை விட்டிருப்பேனா?
சரி இனி அவனைப் பிடித்துப் பணத்தை வாங்க முயற்சி பண்ணுவோம் என லாரிப் பேட்டைக்கு நடந்தேன்.’’
.
தொடரும்......
No comments:
Post a Comment